டிராக்டர் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை… காதல் தோல்வி காரணமா? என விசாரணை
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே டிராக்டர் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகேயுள்ள பிசானத்தூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ். இவரது மகன் மனோஜ்குமார் (19). இவர் அதேபகுதியில் டிராக்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே மனோஜ்குமார் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவர் சமீபத்தில் பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று பெற்றோர் வேலைக்கு சென்றதால், வீட்டில் மனோஜ்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். பிற்பகல் பணி முடித்து நாகராஜ் திரும்பியபோது, வீட்டில் மனோஜ்குமார் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மனோஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்தவர்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.