முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!

 

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!

புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குட்கா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும்; பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து சட்டப்பேரவையில் வினா & விடை நேரத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி எழுப்பிய வினாவுக்கு முதல்வர் அளித்துள்ள இந்த விடை வரவேற்கத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!

தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சீரழிக்கும் சக்திகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் முதலிடத்தில் உள்ளன என்பதை எவராலும் மறுக்க இயலாது. மதுவின் தீமைகளைப் போலவே குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் தீமைகளுக்கு எதிராகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. குட்காவின் தீமைகளை உணர்ந்து இருந்ததால் தான் அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வகை செய்யும் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்தார். அச்சட்டத்தைப் பின்பற்றித் தான் நாட்டில் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக குட்கா தடை செய்யப்படாத நிலையில், அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து கடிதங்களை எழுதியதைத் தொடர்ந்தே 2013-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி தமிழ்நாட்டில் குட்கா தடை செய்யப்பட்டது. ஆனாலும், இப்போதும் கூட சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குட்கா மட்டுமின்றி மிக மோசமான உடல்நல பாதிப்புகளையும், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டு மாணவர்களும், வெளிமாநில மாணவர்களும் அதிக அளவில் பயிலும் கல்வி நிறுவனங்களில் இத்தகைய போதைப் பொருட்கள் கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியை இழந்த மாணவர்கள் ஏராளம். கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியரின் தற்கொலைகளுக்கு இதுவே காரணமாகும்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு!

இத்தகைய சூழலில் முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய சட்டத் திருத்தம் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கப்படுவதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும். இதற்கான சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி, கடுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியர் உள்ளிட்ட இளைய தலைமுறையினரை போதைப் பொருள் சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டும் தான் மாணவர்களை சீரழிக்கின்றன என்று கூற முடியாது. அவற்றுக்கு இணையாக புகையிலைப் பொருட்களும் மாணவர்களை சீரழிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலைக்கு பலியாகின்றனர்; புகையிலைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் தான் சிறுவர்கள் மீது புகையிலை பொருட்களை அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் திணிக்கின்றன. பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தடை மதிக்கப்படவில்லை. மாறாக, மாணவ, மாணவியரின் கண்களில் எளிதில் படும் வகையிலும், மாணவர்களே எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கடைகளில் அவற்றின் உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுப்பதில் காட்டும் அதே அக்கறையை சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு காட்ட வேண்டும். புகையிலை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கி இளைஞர்களைக் காப்பாற்றுவது தான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி தமிழக அரசு பயணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.