தேர்வெழுதும் பார்வையற்றவர்களுக்கு உதவியாளரை நியமிக்கலாம் – தமிழக அரசு அனுமதி!

 

தேர்வெழுதும் பார்வையற்றவர்களுக்கு உதவியாளரை நியமிக்கலாம் – தமிழக அரசு அனுமதி!

ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கக் கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அதுசம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

கைவசமானது விரைவில் வேண்டும்!' ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு –  சவால்முரசு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக, விதிகளை வகுத்து நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம், தேர்வர்களை விட உதவியாளர்களின் கல்வித் தகுதி குறைவாக இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசாணையை அமல்படுத்தும்போது உள்ள இதுபோன்ற சிக்கல்கள் கலையப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.