2ஆவது நாளாக தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! மொத்தபாதிப்பு 23,495!
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 62லட்சத்து 94ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 74ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 22ஆயிரத்து 333பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,162பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,495ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 685பேர், பெண்கள் 473மற்றும் திருநங்கைகள் 4 பேராவர். தமிழகத்தில் உள்ள 72 பரிசோதனை மையங்களில் இன்று ஒரே நாளில் 11,377பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,03,339 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 413குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.