ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்திவந்த இருவர் கைது
திருவள்ளூர்
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை கடத்திவந்த 2 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 430 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன
சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகம்
நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை நடத்தினர். இதில் அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை கடத்திவந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அஜய்குமார் (19) மற்றும் சூர்யா (22) ஆகியோரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 430 போதை மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.