பப்ஜிக்கு அடிக்ட்… ஸ்மார்ட் போன் கேட்ட மகன்… வாங்கிக் கொடுக்க மறுத்த தந்தை… உயிரை மாய்த்த மாணவன்!- திருப்பத்தூர் அதிர்ச்சி

 

பப்ஜிக்கு அடிக்ட்… ஸ்மார்ட் போன் கேட்ட மகன்… வாங்கிக் கொடுக்க மறுத்த தந்தை… உயிரை மாய்த்த மாணவன்!- திருப்பத்தூர் அதிர்ச்சி

திருப்பத்தூரில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் ஒருவன், தனது தந்தை ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்காததால் வேதனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார் (15). இவர் மிட்டூர் அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி பள்ளிக்குச் சென்ற தினேஷ்குமார், இலவச பாடபுத்தகத்தை வாங்கி வந்துள்ளார். பின்னர் தாயின் சேலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர், மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறினர். இது குறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு காவல்துறையினர் வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து, பெற்றோர், கிராம மக்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர் காவல்துறையினர்.

அப்போது, ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால் நண்பர்களுடன் தினேஷ்குமார் விளையாடி வந்துள்ளார். நண்பர்கள் அனைவரும் கையில் செல்போனுடன் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர். இதனால், தனக்கும் ஸ்மார்ட்போன் வேண்டும் என பெற்றோரிடம் தினேஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், தந்தையால் தினேஷ்குமாருக்கு செல்போன் வாங்கி கொடுக்க முடியவில்லை. சம்பவத்தன்று பள்ளியில் புத்தகத்தை வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, சக மாணவர்கள் செல்போனில் பப்ஜி கேம் விளையடியுள்ளனர். இதனை அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினேஷ்குமார், தனக்கும் பப்ஜி கேம் விளையாட வேண்டும் என ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் நண்பர்களிடம் செல்போன் கேட்டுள்ளார் தினேஷ்குமார். ஆனால் அவருக்கு நண்பர்கள் செல்போன் கொடுக்கவில்லை. இதனால், வேதனை அடைந்த தினேஷ்குமார், வீட்டுக்குச் சென்று தாயின் புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பப்ஜி கேம் விளையாட தந்தை ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்காததால் மனவேதனையில் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.