ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டண டிக்கெட் கட்டணங்களை இன்று முதல் திரும்ப பெறலாம்

 

ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டண டிக்கெட் கட்டணங்களை இன்று முதல் திரும்ப பெறலாம்

சென்னை: பொதுமுடக்க காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டண தொகையை பயணிகள் இன்று முதல் திரும்ப பெறலாம்.

இந்தியாவில் திடீரென தலைதூக்கிய கொரோனா வைரஸ் பரவலால் மார்ச் இறுதி முதல் ரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதனால் நாடு முழுவதும் ஜூன் 30-ந் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் பின்னர் திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ரயில் டிக்கெட் ரத்து கட்டணங்கள் பயணிகளுக்கு திரும்ப அளிக்கும் நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டண டிக்கெட் கட்டணங்களை இன்று முதல் திரும்ப பெறலாம்

அந்த வகையில் பொதுமுடக்க காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டு கட்டணங்களுக்கான தொகை பயணிகளுக்கு இன்று முதல் திரும்ப வழங்கப்படுகிறது. அதன்படி மார்ச் 24 முதல் 31-ஆம் தேதி வரை ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்று கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. அதேபோல ஏப்ரல் 1 முதல் 14-ஆம் தேதி வரை ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும். ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட்டுகளை எடுத்தவர்களின் டிக்கெட்களை ரத்து செய்வதற்காக சென்னை கோட்டத்தில் 19 முன்பதிவு மையங்கள் நாளை முதல் செயல்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது அவை சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுன்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய முன்பதிவு மையங்கள் ஆகும். பயணிகள் தங்கள் டிக்கெட்களை திரும்பக் கொடுத்து அதற்குரிய கட்டணங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட முன்பதிவு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.