சாலையில் தறிகெட்டு ஓடிய மினிஆட்டோ மோதி, 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி…

 

சாலையில் தறிகெட்டு ஓடிய மினிஆட்டோ மோதி, 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி…

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிஆட்டோ சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு, டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து நேற்றிரவு பேரணாம்பட்டு நோக்கி மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகனத்தை பாலூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஓட்டிச்சென்றார். ஆம்பூரை அடுத்த சின்னவரிகம் பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டி மீது மோதிவிட்டு, அருகில் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

சாலையில் தறிகெட்டு ஓடிய மினிஆட்டோ மோதி, 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி…

இந்த விபத்தில், இருசக்கர வானத்தில் வந்த ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது 4 வயது மகன் மணிமாறன் மற்றும் சின்ன வரிகம் பகுதியை சேர்ந்த முதியவர் சுப்ரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கஸ்பா பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ், கோகுல் மற்றும் மிதிவண்டியில் சென்ற ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை கஸ்பா பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையில் தறிகெட்டு ஓடிய மினிஆட்டோ மோதி, 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி…

விபத்து குறித்து, ஆம்பூர் உமாராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். சாலையில் தறிகெட்டு ஓடிய ஆட்டோ மோதி சிறுவன் உள்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.