’ஒன்று அல்ல… மூன்று கொரோனோ தடுப்பு மருந்துகள் நவம்பரில் வரும்’ சீனா அதிரடி அறிவிப்பு
உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. உலகமே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பும் அதிக இறப்பும் நடந்திருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 94 லட்சத்து 45 ஆயிரத்து 688 பேர். 3 கோடியை விரைவாக நெருங்கி வருகிறது.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 12 லட்சத்து 79 ஆயிரத்து 833 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 32 ஆயிரத்து 744 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.
சீனாவில் கொரோனா தடுப்பு மருந்துகளான சோதனை பல கட்டங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. ஐக்கிய அமீரகத்தில் சீனாவின் ஒரு கொரோனா தடுப்பூசியை தன் நாட்டு முன்கள பணியாளார்களுக்கு செலுத்த அனுமதி அளித்துவிட்டது.
இந்நிலையில் சீனாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளில் மூன்றில் சீரான முன்னேற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அவை வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.