சர்வ அமாவாசை- ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனிதநீராடி வழிபாடு

 

சர்வ அமாவாசை- ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர்  புனிதநீராடி வழிபாடு

ராமேஸ்வரம்

சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 9 மாதங்களுக்கு பிறகு நீராட அனுமதி வழங்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியும், தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சர்வ அமாவாசை- ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர்  புனிதநீராடி வழிபாடு

எனினும், அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வந்தது. இந்த நிலையில், சர்வ அமாவாசை தினத்தையொட்டி 9 மாதங்களுக்கு பிறகு இன்று அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடவும், பூஜை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபாடு செய்தனர்.

சர்வ அமாவாசை- ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர்  புனிதநீராடி வழிபாடு

எனினும், கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடிப்பதால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால், கோயிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.