தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காணொலியில் விசாரணைக்கு ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் போது தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தது. இதில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து கூறிய நடிகர் ரஜினியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆணையம் ஏற்கெனவே 23 கட்ட விசாரணையை முடித்துள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.அதன் படி, நேரில் ஆஜரான ரஜினி தான் அவ்வாறு கூறியதற்காக காரணத்தை விளக்கினார். தற்போது 24ஆவது கட்ட விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும் இன்று அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையத்தில் ரஜினிக்கு பதில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் இளம்பாரதி, “காணொலியில் விசாரணை நடந்தால் பதில் சொல்வதாக ரஜினிகாந்த் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உடல்நல குறைவால் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.