திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அக்கா – தம்பியால் பரபரப்பு

 

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அக்கா – தம்பியால் பரபரப்பு

திருப்பத்தூர்

சொத்து பிரச்சினை காரணமாக திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கா, தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நரியனேரி ஊராட்சி மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது முதல் மனைவிக்கு லாவண்யா (32) மற்றும் சீனிவாசன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் லாவண்யாவுக்கு திருமணமாகி, குடியாத்தம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் வந்த லாவண்யா மற்றும் சீனிவாசன் ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அக்கா – தம்பியால் பரபரப்பு

அப்போது, தந்தை முனியசாமி, இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தங்களுக்கு சொத்தில் பங்கு தர மறுப்பதாகவும், இதுதொடர்பாக கேட்க சென்றபோது, அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.