‘பாஜகவுடன் கூட்டணி: எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்’ – திருமாவளவன் தாக்கு!
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவின் போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்தனர். அதை தொடர்ந்து பேசிய அமித்ஷா, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியதோடு எதிர்கட்சிகளை விமர்சித்து பேசினார். அரசு நிகழ்ச்சியில் அரசியலை பற்றி பேசியது எதிர்க்கட்சி மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு நிகழ்ச்சியில் பாஜக உடன் கூட்டணியை உறுதிப்படுத்திய முதல்வரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறது என்பது உறுதி. தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் பாஜக ஆட்சி இந்தி திணிப்பு, ஜிஎஸ்டி பாக்கி, வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை என பல துரோகங்களை செய்து வருகிறது.
இவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலமாகவே, எத்தகைய நிர்பந்தத்தில் அதிமுக அரசு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற செயலை செய்த அவர்களை, எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டை அடகு வைத்ததை போல கட்சியையும் அடகு வைத்து விட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.