“மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும்…” திருமாவளவனின் வேண்டுகோள்!
கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள தமிழகத் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்த்தியுள்ளார்.
கொரோனா தாக்குதலின் உச்சம் மே மாதத்தில் தான் இருக்குமென்று மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து எம்.பி. திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் இதில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழலில் இடைக்கால அரசின் தலைமை செயலாளர் இந்த நிலையை எதிர்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கொரோனா முதல் அலையின் போது அதை சமாளிப்பதற்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது. அதனால் மாநில அரசுகள் பரிசோதனை கருவிகளை கூட நேரடியாக வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நேற்று பிரதமர் தலைமையில் கூடிய கூட்டத்தில் மாநில அரசுகளின் நேரடியாக தமக்கான மருத்துவ தேவைகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழகத்துக்கு தேவையான ஆர்டிபிசிஆர் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்வதற்கு தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
இதில் கொரோனா தாக்குதலின் உச்சம் மே மாதத்தில் தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதை சமாளிப்பதற்கு இம்மாத இறுதிக்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவது அவசியம் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளன தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக அந்த வசதிகளை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்றாலே சுமார் 3 கோடி தடுப்பூசிகள் நமக்கு தேவைப்படும். மே 1ஆம் தேதி முதல் 18 வயதினருக்கும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நம்முடைய தேவை மேலும் அதிகரித்துள்ளது. எனவே கொரோனாவிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக தருவிப்பதும், அவற்றை மாவட்டங்களுக்கு விநியோகம் செய்து ஏப்ரல் 30ல் இலக்கு நிர்ணயித்து அதிகபட்சமாக எவ்வளவு பேருக்கு போட முடியுமோ அவ்வளவு தடுப்பூசி போட செய்வதும் தமிழக அரசின் கடமையாகும். சுகாதார அவசரநிலை நிலவும் இந்த இக்கட்டான காலத்தில் தனது கடமையை தலைமை செயலாளர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.