தமிழ் தெரியாதவர்கள் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதா? – திருமாவளவன் கண்டனம்!

 

தமிழ் தெரியாதவர்கள் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதா? – திருமாவளவன் கண்டனம்!

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவிக்கு தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிப்பதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இப்பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து 162 பேர் ஆசிரியர்கள் மனு செய்துள்ளனர். இவர்களை தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

தமிழ் தெரியாதவர்கள் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதா? – திருமாவளவன் கண்டனம்!

தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு வழக்கத்திற்கு மாறாக தமிழரல்லாத வெளிமாநிலத்தவர் பலர் மனு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதனை அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது. இவர்கள் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. குறிப்பாக இவர்களில் பெரும்பாலானவர்கள் உத்திரபிரதேசம் சார்ந்தவர்கள். இவர்கள் தமிழ் மொழியை எழுத பேச அறிந்தவர்க்ளா? இவர்கள் எந்த நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் பதவிக்கு மனு செய்துள்ளனர்?

கடந்த ஆட்சியின் போது அதிமுக அரசின் பரிந்துரைகளை பொருட்படுத்தாமல் மேதகு ஆளுநர் அவர்கள் தமக்குள்ள அதிகார வரம்புகளை மீறி செயல் பட்டதன் விளைவாக தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட ஆளுநர் அவர்கள் வரம்பு மீறி செயல்படுவார் என்ற நம்பிக்கைதான் தமிழ் தெரியாத வட இந்திய மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத்திற்கும் விண்ணப்பம் செய்வதற்கு காரணமா என அச்சம் எழுகிறது. இத்தகைய சூழலில் துணைவேந்தர் போன்ற உயர் பதவிகளில் தமிழரல்லாத பிற மாநிலத்தவர்கள் அமர துடிப்பது எதைக் காட்டுகிறது. தமிழகத்தின் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரு.சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆக்கியதும் அவரால் உருவான பல்வேறு சிக்கல்களையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை. எனவே தமிழக பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு சூழலிலும் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவதற்கு முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும். அவர்களை நியமிப்பது தமிழகத்தின் நலன்களுக்கு எதிரானது; மிகவும் ஆபத்தானது.

அத்துடன் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழக அரசு தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தேர்வு செய்யும் துணைவேந்தர்களை அவற்றின் வேந்தரான ஆளுநர் அவர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்றும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு தமக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மேதகு ஆளுநர் அவர்கள் தமது அதிகார வரம்புகளை மீறும் நிலை வரும்போது அதனை எவ்வகையிலேனும் தடுத்து நிறுத்திட ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.