“சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மையில்லை” – கலையரசன் குழு
துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாருக்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்று கலையரசன் குழு கூறியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், தனது மீது எந்த தவறும் இல்லை, தமிழக அரசு வேண்டுமென்றே தன் மீது பழி போடுகிறது என்றார். இதை தொடர்ந்து சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை எனவும் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என்று கலையரசன் குழு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மையில்லை. தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு துறை கட்டுப்பாட்டாளர் ,அதிகாரிகளிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.விரைவில் சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று அக்குழு கூறியுள்ளது.