பணத்தை தொலைத்து அலைமோதிய இளைஞர்… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மூதாட்டியின் செயல்…

 

பணத்தை தொலைத்து அலைமோதிய இளைஞர்… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மூதாட்டியின் செயல்…

தேனி

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சுற்றுலா பயணி தவறவிட்ட பணத்தை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த மூதாட்டிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர் செல்லம்மாள்(75). சம்பவத்தன்று இவர் பணி முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தபோது, அதனுள் ஏராளமான பணம், 4 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.

அதனை எடுத்துச்செல்ல விரும்பாத செல்லம்மாள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹைவேவிஸ் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த பணம் உத்தமபாளையத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனை அடுத்து, சாகுல் ஹமீதை தொடர்புகொண்டு பேசிய போலீசார், அவரை ஹைவேவிஸ் காவல் நிலையத்திற்கு வர வழைத்தனர்.

பணத்தை தொலைத்து அலைமோதிய இளைஞர்… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மூதாட்டியின் செயல்…

அங்கு செல்லம்மாளின் கைகளால் தொலைத்த பணம் மற்றும் ஆவணங்களை சாகுல் ஹமீதிடம் வழங்கி பெருமை படுத்தினர். தொலைந்த ஆயிரக்கணக்கான பணம் திரும்ப கிடைத்ததால் ஆனந்த கண்ணீர் வடித்த சாகுல், தனது பணத்தில் 50 சதவீதத்தை மூதாட்டிக்கு வழங்க முன்வந்தார்.

ஆனால் அதனை ஆனந்த கண்ணீருடன் மூதாட்டி வாங்க மறுத்து விட்டார். பின்னர், போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, அன்பின் அடையாளமாக ஒரு புதிய சேலை வாங்குவதற்கான தொகையை மட்டும் கண்ணீர் கலந்த சிரிப்புடன் பெற்றுக்கொண்டார்.