திருடிய பைக்கை உரிமையாளருக்கே கொரியரில் திருப்பி அனுப்பி வைத்த திருடர்

 

திருடிய பைக்கை உரிமையாளருக்கே கொரியரில் திருப்பி அனுப்பி வைத்த திருடர்

கோவை: திருடிய பைக்கை உரிமையாளருக்கே கொரியரில் திருடர் திருப்பி அனுப்பி வைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் லேத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அவரது பைக் திருடு போனது. இதையடுத்து பைக் திருடு போனது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வரும் பிரசாந்த் என்பவர் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று சுரேஷுக்கு கொரியர் வந்திருப்பதாக அவருக்கு போன் வந்துள்ளது. இதை தொடர்ந்து கொரியர் அலுவலகம் சென்ற சுரேஷ் தனக்கு வந்த கொரியரை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் பைக்கை திருடிச் சென்ற பிரசாந்த் மயிலாடுதுறையிலிருந்து சுரேஷுக்கு பைக்கை கொரியரில் அனுப்பியுள்ளார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாததால் பிரசாந்த் பைக்கை திருடிச் சென்றதால் திருப்பி அனுப்பியுள்ளாரா? அல்லது போலீஸ் நடவடிக்கைகளுக்கு பயந்து பைக்கை கொரியரில் திருப்பி அனுப்பினாரா என்று சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.