பாலியல் தொல்லை அளித்த கொளுந்தனாரை வெட்டிக் கொன்ற அண்ணி!

 

பாலியல் தொல்லை அளித்த கொளுந்தனாரை வெட்டிக் கொன்ற அண்ணி!

திருவண்ணாமலை

செங்கம் அருகே கணவர் இல்லாதபோது, தனக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற கொளுந்தனாரை, அண்ணி வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாய்நாயக்கன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (50). லாரி ஓட்டுநர். இவருக்கு பராசக்தி (45) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். செல்வத்தின் தம்பி ராஜா (48), கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே செல்வம் வேலைக்காக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருக்கும் பராசக்திக்கு, ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பாலியல் தொல்லை அளித்த கொளுந்தனாரை வெட்டிக் கொன்ற அண்ணி!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜா, அண்ணி பராசக்தியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்து உள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த பராசக்தி, தற்காப்பிற்காக வீட்டில் இருந்த அரிவாளால் ராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் டி.எஸ்.பி சரவணன் குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், செங்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பராசக்தியை கைது செய்தனர்.