சகோதரிகள் இடையே சேனல் மாற்றுவதில் பிரச்னை… கண்டித்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்த மகள்

 

சகோதரிகள் இடையே சேனல் மாற்றுவதில் பிரச்னை… கண்டித்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்த மகள்

சகோதரிகள் இடையே டிவி சேனல் மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவர் புதுச்சேரியில் உள்ள சேதராப்பட்டு சரஸ்வதி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். செபஸ்டின்- சத்யசுதா தம்பதிக்கு கவுசிகா (14), ஆசிகா (12) என்ற இரண்டு மகள்கள். கவுசிகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று 9-ம் வகுப்பு செல்ல தயாராக இருந்தார். கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்த கவுசிகாவுக்கும், தங்கை ஆசிகாவுக்கும் டி.வி.யில் சேனல் மாற்றுவது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. அப்போது தாயார் சத்யசுதா, தங்கையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுமாறு கவுசிகாவை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கவுசிகா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த செபஸ்டின், சத்யசுதா ஆகியோர் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கவுசிகா தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தூக்கில் தொங்கிய மகளை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவுசிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து சேதராப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.