ஊரடங்கு விதிமீறல் : “வாகனத்தை பறிமுதல் செய்யக் கூடாது”
எந்த ஒரு சூழலிலும் பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்று காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை மதியம் 12 மணி வரை செயல்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு தனியார், அரசு பேருந்துகள், வாடகை டாக்சி, ஆட்டோ முதலிய வாகனங்கள் இயங்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல்துறையினர்
மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் பொது மக்கள் கூட்டமாக கூடுவதை ஒலிபெருக்கி பயன்படுத்தி தவிர்க்க வேண்டும் என்றும் தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஊரடங்கு விதிமீறல் காரணமாக வாகனத்தை பறிமுதல் செய்யக் கூடாது, அப்படியே பறிமுதல் செய்தாலும் அதை சில மணி நேரங்களில் விடுவிக்க வேண்டும், ஊரடங்கு விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.