வீடுகள் முன் கோலமிட்டு கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் மணப்பாறை மக்கள்
மணப்பாறை பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திட வலியுறுத்தி வீடுகள் முன் கோலமிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள் மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் சூழ்நிலையில் இதுவரை கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம், போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வதை தவிர்த்து விட்டு பொதுமக்கள் தங்களின் வீடுகளின் முன்பு “மணப்பாறைக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும்” என்ற வாசகத்துடன் கோலம் போட்டு அதை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பலரும் தங்களின் வீடுகளின் முன்பு கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டையை வைத்து படம் பிடித்து அதை சமூக வலைதளங்களின் பதிவேற்றும் செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே, மணப்பாறைக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி உடனடியாக அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.