கட்சி தொடங்கினார் அரசு ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலா
மதுரையை சேர்ந்தவர் ஆசிரியை சபரிமாலா. இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எல்லையடி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இது மட்டுமின்றி பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வந்த இவர் நீட் தேர்வினால் தனது மருத்துவர் ஆகும் கனவை இழந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒருக்கட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்த இவர் இதையடுத்து சமூகம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் சபரிமாலா நாகையில் பெண் விடுதலை என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இதுவரை எந்த அரசியல் கட்சியிலும், அமைப்பிலும் இல்லாமல் இருந்த இவர் தற்போது பெண்ணுரிமையை கையிலெடுத்து புதிய கட்சியை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.