தமிழக அரசின் அலட்சியம், அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ போர் தான் கொரோனா பரவலுக்கு காரணம்! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கொரோனா தொடர்பாக தமிழக அரசு தொடக்கம் முதல் அலட்சியமாக நடந்து வருவதாலும் அமைச்சர்களுக்கு இடையே ஈகோ போர் இருப்பதாலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கொரோனா நோய்த் தொற்றால் தமிழகம் கடந்த 2 மாதங்களாக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வரும் வேளையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் மாநிலத்தில் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தங்களை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், நோய் குறித்த தகவல்களை மறைக்கும் ஆளும் அரசின் போக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்து வெளிப்படைத்தன்மை பேணாமல் இருப்பதை தவறு என சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அரசின் பொறுப்பற்ற செயலால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். மார்ச் 7ம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். மார்ச் 21ம் தேதி மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இடைப்பட்ட இரண்டு வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதற்கட்ட ஊரடங்கின் போது சராசரியாக தினமும் 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 2வது ஊரடங்கின் போது 2750 பேர் தினமும் 101 பேர் அளவில் பாதிக்கப்பட்டார்கள். மே3 முதல் 17ம் தேதி வரையில் தினமும் சராசரியாக 586 பேர் என 8201 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 4வது கட்டத்தின் போது 22 ஆயிரத்து 333 பேர் தினந்தோறும் 904 பேர் என பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைய நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஏப்ரல் 15ம் தேதி 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று இன்று தமிழகத்தில் 10 % ஆக உயர்ந்துள்ளது. 10ல் ஒருவருக்கு கொரோனா இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டுமே நோய்த் தொற்றின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. நாட்டிலேயே நோய் பரவலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதை ஆளும் அதிமுக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நாட்டின் பிற நகரங்களை விட நோய் பரவலின் விகிதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் ஒப்பிடுகையில் 10 சதவிகித நோயாளிகள் சென்னையில் உள்ளதோடு 5.2 சதவிகிதத்தில் அதிகரித்திருக்கிறது.
தொடக்கத்திலிருந்தே வைரஸ் பரவலை தடுக்க அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்தடுத்து நோய்த்தொற்று பரவிய போதும் அரசின் அலட்சியத்தால் தமிழக மக்கள் பேரிடரில் சிக்கித் தவித்து வருகிறார்கள். முதலமைச்சர் பழனிசாமியின் பொறுப்பின்மையால் இன்று தமிழ்நாடு மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது. மத்திய தேசிய ஊரடங்கு அறிவித்த பிறகே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்க தொடங்கியது. அதுவரையில் மத்திய அரசின் பொம்மையாக இருந்து குழப்பத்தில் செய்வதறியாது தத்தளித்து வந்தது.
இவற்றுக்கும் மேல், பரிசோதனை கருவிகளின் தரமே கேள்விக் குறியாகியது. தற்போது 3 மடங்காக பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்த போதும் நோய்த் தொற்று குறைந்தபாடில்லை. மே 13ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மே 31க்குள் நோய் பரவல் குறைந்துவிடும் என்று எண்ணி ஜுன் 1ம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை அறிவித்தது. ஆனால் மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்த பிறகே தேர்வை நடத்த முடியாது என்பதை அரசு உணர்ந்தது. இப்படியான குழப்பமான அறிவிப்புகளை அரசு அறிவித்தது?
ஜூன் 7 அன்று, மீண்டும் பொதுத்தேர்வை நடத்தும் எண்ணத்தை தெரிவித்த அரசை எதிர்த்து தி.மு.கவும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்றமும் பல்வேறு கிடிக்குப்பிடி கேள்விகளை கேட்டு அறிவுறுத்திய பிறகு தேர்வை அரசு ரத்து செய்தது. இவ்வாறு 9 லட்சம் மாணவர்களின் உயிரை பணயம் வைத்து தேர்வை நடத்தும் முடிவை எப்படி அரசு நியாயப்படுத்தும்?
கொரோனா காலத்தில் மரண நிகழ்வுகளை வெளியிடுவதில் அரசு தாமதிப்பது ஏன்? மரணங்களை பற்றிய தகவல்களே இல்லாமல் அரசு எப்படி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுக்கிறது? சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு நொறுங்கிப் போயுள்ளது என்பதையே இவையனைத்தும் வெளிப்படுத்துகிறது. அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ போர் முடிவுக்கு வர வேண்டும். அதிகாரிகளுக்கு இடையிலான பதவிப் போட்டி தவிர்க்கப்பட வேண்டும்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு !#DMK #mkstalin #PressMeet pic.twitter.com/IkkxFGOIZY
— Kalaignar Seithigal (@Kalaignarnews) June 15, 2020
நோயைக் கட்டுப்படுத்துவதில், தடுப்பதில் முன்கள வீரர்களாகச் செயல்படுவோருக்கு என அதிமுக அரசு எவ்வித ஆதரவையும் கொடுப்பதில்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவது நெருக்கடியை கையாள தெரியாத நிலையில் அரசு உள்ளது என தெளிவுபடுத்துகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 85 நாட்கள் ஆகியும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை முறைப்படி கணக்கெடுக்கும் நடைமுறை உருவாக்கப்படாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.