செங்குன்றத்தில் 17 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
திருவள்ளூர் அருகே 17 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரை மீட்டு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு, அதேபகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் திங்கட்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியர் உத்தரவின் பேரில், சமூக நலத்துறை நிர்வாகி ஞானசெல்வி தலைமையிலான அதிகாரிகள், சிறுமியை மீட்பதற்காக பம்மதுகுளம் பகுதிக்கு சென்றனர். அப்போது சிறுமியை அழைத்துச்செல்ல அவரது பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிகாரிகளின் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார், சிறுமியை மீட்டு திருவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் அவரை ஒப்படைத்தனர்.