அரக்கோணத்தில் கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

 

அரக்கோணத்தில் கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நபர் பழிக்கு பழியாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாபாதர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). இவர் கடந்த ஆண்டு அரக்கோணத்தில் கோகுல் என்பவரை படுகொலை செய்த வழக்கில் கைதாகி, வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நேற்று முன்தினம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.

அரக்கோணத்தில் கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

தொடர்ந்து, அரக்கோணம் கம்மவர் தெருவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கும்பல் கார்த்திகேயனை, அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியோடியது. தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கோகுல் கொலை வழக்கில் 7-வது குற்றவாளியான கார்த்திகேயன் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டதை அறிந்த, கோகுலின் உறவினர்கள் பழிக்கு பழியாக கார்த்திகேயனை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து, அரக்கோணம் டவுன் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.