“அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா. உடல் நல்லடக்கம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடல் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. எழுத்தாளர் கி.ரா. கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். கரிசல் மண் சார்ந்த இவரின் எழுத்துக்களால், கி.ரா., கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.கி.ரா. மறைவுக்கு வைகோ, நடிகர் சிவக்குமார், ஆளுநர் தமிழிசை, எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று குறிப்பிட்டுள்ளார்.