“மறுக்கப்பட்டவர்களின் குரல் எழாமல் நசுக்கப்படுவதன் பிரதிபலிப்பே இச்செயல்” : டெல்லி பல்கலை., வலுக்கும் கண்டனம்!!

 

“மறுக்கப்பட்டவர்களின் குரல் எழாமல் நசுக்கப்படுவதன் பிரதிபலிப்பே இச்செயல்” : டெல்லி பல்கலை., வலுக்கும் கண்டனம்!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் விளக்கம் அறிவுத்துறையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது என்று எம்.பி.சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்.பி. சு. வெங்கடேசன் தனது அறிக்கையில், “டெல்லி பல்கலைக் கழகம் தனது பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை நீக்கியது குறித்து எனது கண்டனத்தை நேற்று பதிவு செய்திருந்தேன். தமிழக முதல்வர் மற்றும் பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழகம் விளக்க குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கம் ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் தகுதியை பிரதிபலிப்பதாக இல்லை. நேரடியாக இந்த படைப்புகள் ஏன் நீக்கப்பட்டன என்று அந்த அறிக்கை கூறவில்லை. ஆனாலும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை. நான்கு காரணங்களை சொல்கிறார்கள். ஒன்று, பல பிரபல அறிஞர்களின் படைப்புகளை கொண்டு வரப் போகிறோம்” என்கிறார்கள். பாடதிட்டத்துக்கோ, படைப்புக்கோ “பிரபலம்” என்பது ஒரு தகுதியாக ஒரு போதும் இருக்க முடியாது. இப்படி ஒரு தகுதியை பல்கலைக்கழகம் பேசுவது அறிவுத்துறையின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

“மறுக்கப்பட்டவர்களின் குரல் எழாமல் நசுக்கப்படுவதன் பிரதிபலிப்பே இச்செயல்” : டெல்லி பல்கலை., வலுக்கும் கண்டனம்!!

இரண்டாவது காரணம், நல்லிணக்கத்தையும், பன்முகத் தன்மையையும் பிரதிபலிக்க வேண்டுமென்பது. நல்லிணக்கம் எப்படி உருவாகும்? ஒடுக்குமுறைகள் நிறைந்த சமூகம் நல்லிணக்கம் கொண்டதாக இருக்க முடியுமா? சுகிர்த ராணி, பாமா இரு ஆளுமைகளின் படைப்புகளும் சாதிய ஒடுக்குமுறையை, பாலின ஒடுக்குமுறையை பற்றி பேசுபவை. பன்மைத்துவம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக அமைவது; பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், சமூகக் குழுக்களின் இருப்பை, அடையாளத்தை, பங்களிப்பை, வரலாற்றை அங்கீகரித்து சமத்துவத்தை உறுதி செய்வது ஆகும். பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான இடம் மறுக்கப்படுவது எப்படி பன்மைத்துவ பாரம்பரியத்தை போற்றுவதாக இருக்க முடியும்? இக் கேள்வியை பொது சமூகத்தின் முன் வைத்து உரையாடல் நிகழ்த்தும் ஆற்றல் மிக்க படைப்பாளிகள் இவ்விருவரும் ஆவர். இந்தியக் கல்விப் புலத்தில் தேவைப்படும் முக்கியமான பகிர்வுகள் இவை. ஆகவே இரண்டாவது காரணமும் இற்று விழுகிறது.

“மறுக்கப்பட்டவர்களின் குரல் எழாமல் நசுக்கப்படுவதன் பிரதிபலிப்பே இச்செயல்” : டெல்லி பல்கலை., வலுக்கும் கண்டனம்!!

மூன்றாவது, யாரையும் புண்படுத்த கூடாதாம். ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் புண்பட்டு விடக் கூடாது; நியாயம், நீதி மறுக்கப்படுபவர்கள் புண்பட்டு விடக் கூடாது என்றாலும் புரிந்து கொள்ள முடியும். யாரையும் என்றால் என்ன பொருள்? ஒரு சமூகக் குழுவை சார்ந்தவர்கள் பிற சமூகக் குழுக்கள் மீது வேறுபாடு பாராட்டினால், உயர்வு தாழ்வு கற்பித்தால் யாரும் புண்படக் கூடாது என்று நடு நிலை வகிக்க முடியுமா? அது உண்மையில் நடு நிலையா? சுகிர்த ராணி, பாமா படைப்புகள் யாரை புண்படுத்துவதாக பல்கலைக் கழகம் கருதுகிறது?

நான்காவது, கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் உண்மையில் பிரதிபலிக்க வேண்டுமாம். சமூகத்தில் பாலின ஒடுக்குமுறை இருப்பது உண்மையில்லையா? ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்கள் இரட்டை ஒடுக்குமுறையை எதிர் கொள்வது உண்மை இல்லையா? இன்னமும் கையால் மலம் அள்ளும் கொடுமை முடிவுக்கு வரவில்லை என்பது உண்மையில்லையா? இந்த உண்மைகளையே சுகிர்தராணியும், பாமாவும் பேசியுள்ளார். உண்மையில் உண்மை பேசுவதுதான் டெல்லி பல்கலைக் கழகத்திற்கு பிரச்சினை போல.
இப்போது நீக்கப்பட்ட படைப்புகளுக்கு வருவோம். டெல்லி பல்கலைக் கழகம் நீக்கி இருக்கும் பாடங்களில் சுகிர்தராணி எழுதிய இரு கவிதைகள், பாமாவின் சங்கதி நாவலில் இருந்து சில அத்தியாயங்கள் ஆகியன அடக்கம். நீக்கப்பட்ட சுகிர்தராணியின் கவிதைகளில் ஒன்று கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்க்கை குறித்தது. மற்றொன்று இயற்கையும் பெண் உடலும் சுரண்டப்படுவது பற்றியது. பாமாவின் சங்கதி நாவல் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதிப் பெண்களின் போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. பாலினமும், சாதியும் ஒரு சேர ஒடுக்கப்பட்ட பெண்களை துரத்துவதை உயிர்ப்போடு பேசுகிற படைப்பு அது.
காலத்தின் கண்ணாடியாக உண்மை நிலையை பிரதிபலிக்கும் இந்த படைப்புகளை நீக்கியது தான் ஒரு தலைப்பட்சமான மற்றும் ஜனநாயகத்தை மறுக்கிற முடிவு. ஆனால் டெல்லி பல்கலைக் கழகம் அறிக்கையில் வார்த்தைக்கு வார்த்தை ஜனநாயகம் பற்றி பேசுவதுதான் நகைச்சுவை.

ஆகவே டெல்லி பல்கலைக் கழகம் தந்துள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல. உள் நோக்கத்தோடு இப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. காலாகாலமாக இடம் மறுக்கப்பட்டவர்களின் குரல் எழாமல் மீண்டும் நசுக்கப்படுவதன் பிரதிபலிப்பே இந்த நீக்கம்.பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் என்பதே உறுதியான கோரிக்கை. இதற்கான குரல்களை ஒன்று சேர்ப்போம். அனைத்து திசையிலிருந்தும் பேரோசையாய் இக்குரல்கள் எதிரொலிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.