நடத்தையில் சந்தேகம்… நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி…

 

நடத்தையில் சந்தேகம்… நடுரோட்டில் மனைவியை  வெட்டிக்கொன்ற தொழிலாளி…

தேனி

உத்தமபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கூலி தொழிலாளி, மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். கூலி தொழிலாளி. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். முனியம்மாள், கேரளாவில் உள்ள தேயிலை எஸ்டேட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முனியம்மாளுக்கு உடன் பணிபுரியும் நபருடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சந்திரன் கண்டித்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு புறப்பட்ட முனியம்மாளை பணிக்கு செல்ல வேண்டாம் என்று சந்திரன் வற்புறுத்தி உள்ளார்.

நடத்தையில் சந்தேகம்… நடுரோட்டில் மனைவியை  வெட்டிக்கொன்ற தொழிலாளி…

ஆனால், அதனையும் மீறி முனியம்மாள் புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் அங்குள்ள கோழிப்பண்ணையின் அருகே நடந்துசென்ற முனியம்மாளை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த, தேவாரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்திரனை தேடி வருகின்றனர்.