1 வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொன்ற பாட்டி… கோவையில் கொடூரம்!

 

1 வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொன்ற பாட்டி… கோவையில் கொடூரம்!

கோவை

கோவையில் 1 வயது ஆண் குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்த பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் கவுளி பிரவுன் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தம். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 1 வயது ஆண் குழந்தை துர்கேஷ் உட்பட 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், நந்தினி குழந்தை துர்கேஷுடன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தாய் நாகலட்சுமி(52) வீட்டில் தங்கியிருந்தார். மேலும், அதே பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இதனால் குழந்தையை பாட்டி நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்த நந்தினி, பார்த்தபோது தொட்டிலில் குழந்தை துர்கேஷ் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், துர்கேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1 வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொன்ற பாட்டி… கோவையில் கொடூரம்!

பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேமடைந்த போலீசார், நந்தினி மற்றும் பாட்டி நாகலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையை தாக்கியதை நாகலட்சுமி ஒப்புக்கொண்டார். மேலும், துர்கேஷ் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வாயில் போடுவதால் ஆத்திரம் ஏற்பட்டதால் பிஸ்கட் கவரை குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு வீட்டு வேலைபார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இதில், சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து, நாகலட்சுமியை கைதுசெய்த ஆர்.எஸ்.புரம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.