கொரோனா நோயாளிக்கு இடம் கேட்ட தமிழிசை… அரை மணி நேரத்தில் இடம் ஒதுக்கிய தமிழக அரசு!
சென்னை அரசு மருத்துவமனைகளில் 93 வயதான கொரோனா நோயாளிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் தெலங்கான ஆளுநர் தமிழிசை தலையிட்ட பிறகு இடம் கிடைத்துள்ளது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வாட்ஸ் ஆப் மெசேஜை எடிட் செய்து ஸ்கிரீன்ஷாட் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதனுடன், “தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோருக்கு சென்னையை சார்ந்த ஒரு குடும்பத்தினர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலைப் பகிர்ந்திருந்தேன். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டுகிறேன்” என்று கூறியிருந்தார்.
Thank you honb Health minister Tamil Nadu @Vijayabaskarofl and Health secretary TN to respond to a family’s what’s app request from Chennai forwarded by me from Hyderabad.Appreciate your prompt response to admit him in GH Chennai Thank you honb @CMOTamilNadu pic.twitter.com/TSVbSzcWPU
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 11, 2020
அந்த ஸ்கிரீன்ஷாட்டில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய 93 வயதான தந்தைக்கு கொரோனா பாசிடிவ் என்று வந்துள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றபோது முடியவில்லை. அவரை வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் வைத்திருக்க சிலர் பரிந்துரைத்தனர். ஆனால், 4-5 நாட்களாக உணவு உட்கொள்ள முடியாமல் இருக்கும் அவரை வீட்டில் தனிமைப்படுத்துதல் என்பது சாத்தியமில்லை. ஓமந்தூரார், கே.எம்.சி, ஸ்டான்லி என எங்கு இடம் கிடைத்தாலும் பரவாயில்லை. தயவு செய்து ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்று உள்ளது.
இந்த தகவலை தமிழிசை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியதாக தெரிகிறது. அவர்கள் நோயாளியின் விவரத்தைக் கேட்டு சென்னை அரசு மருத்துவமனையில் இடம் கொடுக்க உத்தரவிட்டிருப்பது புரிகிறது. அதற்கு அவர் நன்றியும் கூறியிருக்கிறார்.
சென்னையில் நோயாளிகள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் இடம் உள்ளது என்று தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், மருத்துவமனைக்கு சென்றால் இடம் இல்லை என்று திருப்பி அனுப்புவதாக பலரும் புகார் கூறுகின்றனர். இது தொடர்பாக டி.வி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கூட பதிவிட அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது இடம் வாங்க தெலங்கான ஆளுநர் போல யாராவது ஒருவர் சிபாரிசு தேவை என்பதை இந்த பதிவு காட்டுகிறது. சிபாரிசு எதுவுமின்றி இடம் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையும் படிக்கலாமே:மருத்துவர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்