கொரோனா ஊரடங்கு கால விடுப்பை முறைப்படுத்த அரசாணை! – தமிழக அரசு வெளியிட்டது
ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்பிறகு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊழியர்கள் வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த காலத்தில் பணிக்கு வராதவர்களின் விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மே 17ம் தேதி வரை பணிக்கு வராத அரசு ஊழியர்கள், பணிக்கு வந்ததாக கருதப்படுவார்கள். மே 18ம் தேதிக்குப் பின் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்ட போது, குறைந்த பட்ச போக்குவரத்து வசதி செய்யப்பட்டும், பணிக்கு வரவில்லையென்றால் அது விடுப்பாகவே கருதப்படும்.
மே 18ம் தேதிக்குப் பின் விடுப்பிலிருந்த ஊழியர்கள் அதற்கான விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். கொரோனா அல்லாத வேறு வகையான மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தால் அதற்கான மருத்துவச் சான்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா அறிகுறி இருந்து விடுப்பிலிருந்தாலோ, அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்பித்தால், அது ஊதியப் பிடித்தம் இல்லாத சிறப்பு விடுப்பாகக் கருதப்படும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரவில்லையென்றாலும் அது பணிக்காலமாகவே கருதப்படும். தமிழக அரசின் அனைத்து வகை ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.