`அதிக பீஸ் வசூலா? பெற்றோர்களே நீங்கள் புகார் அளிக்கலாம்!’- தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறது தமிழக அரசு

 

`அதிக பீஸ் வசூலா? பெற்றோர்களே நீங்கள் புகார் அளிக்கலாம்!’- தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறது தமிழக அரசு

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு 2021- 2023ம் ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய இருக்கிறது சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழு.

தமிழகத்தில் தனியார் நர்சரி, மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் என 10,558 தனியார் உள்ளன. இதற்கான கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழுவால் மாற்றி அமைக்கப்படுகிறது.

சுயநிதி கல்வி கட்டணக்குழு நிர்ணயம் செய்த கட்டணம் 2019-20 ம் கல்வி ஆண்டுடன் 5400 பள்ளிகளுக்கு முடிவடைந்தது. மேலும் கட்டணம் நிர்ணயம் செய்யாத பள்ளிகள், முழுமையாக அங்கீகாரம் பெறாத பள்ளிகள் என 8200 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய உள்ளது தமிழக அரசு. அந்த வகையில் 2020 முதல் 2023 வரையிலான அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் கட்டணங்களை நிர்ணயிக்க தனியார் பள்ளிகள் தங்களுடைய வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை 600-க்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், அவற்றில் 300 பள்ளிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன.

“புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு முன்னர் பழைய கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்றும் புதிய கட்டணம் நிர்ணயித்த பின்னர் அதன் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வசூலித்துக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ள குழு, “அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் நேரடியாக குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது விசாரணை செய்யப்பட்டு பள்ளியில் தவறு செய்து இருந்தால் கட்டணம் திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை எத்தனை தவணைகளில் வசூல் செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.