பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
ராமநாதபுரம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்றுள்ளது இதனால், தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வரை கடல் அலை சுமார் 3 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு எழக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.