“சென்னையில் பணி, வியாபாரத்திற்காகவும் இ-பாஸ் வழங்கப்படும் ” : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கைகள் தொடர்ந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையை பொருத்தவரையில் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தொடரும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர்,சென்னையில் டிஸ்சார்ஜ் விகிதம் என்பது 87.05 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் சென்னையில் 24 தனிமைப்படுத்த பகுதிகள் மட்டுமே உள்ளது.
சென்னையில் வழக்கமான 3 காரணங்களுடன் பணி, வியாபாரத்திற்காகவும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மருத்துவம், மரணம் திருமணத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டு வந்த இ பாஸ் தற்போது கூடுதலாக இரண்டு காரணங்களுக்காக அளிக்கப்படுகிறது. குறிப்பாக முன்பைவிட 35 சதவீதம் கூடுதலாக இ- பாஸ் வழங்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.