இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு… சீக்கிரம் தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யுங்க
2019-20 நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியோடு முடிவடைகிறது. ஆகையால் இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அடுத்த 3 தினங்களில் அதனை முடித்து விடுங்கள்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தியது. கடந்த ஜூன் மாதத்திலிருந்துதான் லாக்டவுனை படிப்படியாக மத்திய அரசு தளர்த்தியது. இதனால் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மற்றும் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டனர்.
இதனையடுத்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் பல முறை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. கடைசியாக கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கடந்த 24ம் தேதி நிலவரப்படி, கடந்த 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை மொத்தம் 3.97 கோடி பேர் தாக்கல் (ஐ.டி.ஆர்.-1, ஐ.டி.ஆர்.-2, ஐ.டி.ஆர்.-3, ஐ.டி.ஆர்.-4) செய்துள்ளனர். கடந்த நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் வியாழக்கிழமையோடு (டிசம்பர் 31) முடிவடைகிறது. ஆகையால் இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அடுத்த 3 நாட்களில் செய்து விடுங்கள். இதற்கு மேலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு கால அவகாசம் கொடுக்க வாய்ப்பில்லை என தகவல்.