16 வயது சிறுமியை ஒருநாள் பிரதமராக்கிய நாடு இதுதான்!
உலகளவில் கல்வி குறித்த உரையாடல்களில் நிச்சயம் ஒரு நாட்டின் பெயர் இடம்பெறும். அதுதான் பின்லாந்து. அங்கு குழந்தைகளின் சிந்தனையை வளர்த்தெடுக்கும் விதமாக கல்வி முறையை அமைத்திருக்கிறது. அந்தளவுக்கு குழந்தைகளின் நலனில் அக்கறைச் செலுத்தி வருகிறது பின்லாந்து அரசு. தற்போது முக்கியமான இன்னொரு முன்னெடுப்பையும் எடுத்திருக்கிறது.
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தவர். தனது 34 வயதிலேயே பிரதமராகப் பதவியேற்றவர். உலகின் குறைந்த வயது பெண் பிரதமர் எனும் பெருமைக்கு உரியவர். பெண்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்க விரும்புபவர் சன்னா மரின். அதனால்தான் அவரின் அமைச்சரவையில் 12 பெண்களும் 7 ஆண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11. இந்த நாளை அர்த்தப்பூர்வமாகக் கொண்டாட முடிவெடுத்தார் சன்னா மரின். ஆவா முர்டோ எனும் 16 வயது சிறுமியை ஒருநாள் பிரதமராக அமர வைத்திருக்கிறார் சன்னா மரின்.
அன்றைய தினம் முழுவதும் ஆவா முர்டோதான் பிரதமர். சட்டம் இயற்றுதல், சட்ட ஒழுங்கு கையாளுதல் போன்ற முக்கிய முடிவுகளைச் சிறுமியால் எடுக்க முடியாது என்றபோதிலும் நாட்டின் மிக உயரிய பொறுப்புகளில் உள்ளவர்களைச் சந்திப்பதும், தம் கருத்துகளைப் பகிரவும் முடியும். அந்த வகையில் ஆவா முர்டாவுக்கு பெருமை தரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.