ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவு
உத்தர பிரதேசம் ஹத்ராஸில் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். மேலும் அந்த பெண்ணின் உடலை போலீசாரே அவசர அவசரமாக தகனம் செய்தனர். ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 3ம் தேதியன்று ஹத்ராஸ் வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ய யோகி ஆதித்யநாத் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். உத்தர பிரதேச அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்வதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது.
லக்னோ மண்டலத்தின் காசியாபாத் பிரிவு சி.பி.ஐ., ஹத்ராஸ் வழக்கை விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வழக்கில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹத்ராஸ் வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் சென்றுள்ளதால் விரைவில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.