வெளிநாட்டில் உள்ளவர்களுடன் முருகன் பேச மத்திய அரசே அனுமதிக்க வேண்டும்! – தமிழக அரசு வாதம்
வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன் பேச வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி உள்ளிட்டோர் தங்கள் உறவினர்களிடம் வாட்ஸ் அப் கால் மூலமாக பேச அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்தார்.
விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்ட முருகன் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து தமிழக அரசு புதுபுது காரணங்களை கூறி அனுமதி அளிக்க முடியாது என்று கூறி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தமிழக அரசு கூறியது. அந்த கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. அதனால் தமிழக அரசால் அனுமதிக்க முடியாது” என்றார்.