கிசான் திட்ட முறைகேட்டிற்கு காரணம் மத்திய அரசு தான் – முதல்வர் பழனிசாமி
கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்த ஆய்வில் முறைகேடு நடந்ததது அம்பலமானது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமான நிலையில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திரும்ப பெற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிசான் திட்டம் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் தாமாக பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதால்தான் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் தமிழகத்தில் கொலைகள் மறைக்கப்பட்டதாக ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாக கூறிவருகிறார் என்றும் தெரிவித்தார்.