தென்காசி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி!
தென்காசி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து, 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் கணேஷ்குமார்(11). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த கணேஷ்குமார், நேற்று காலை வீட்டில் இருந்த மாடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள தோட்டத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக கணேஷ்குமார் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே, அந்த பகுதி இளைஞர்கள் கிணற்றில் குதித்து தேடினர். சுமார் 1 மணிநேரத்திற்கு பின் அவர்கள் சிறுவனை இறந்த நிலையில் சடலமாக மீட்டனர்.
தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.