ஊரடங்குக்குப் பிறகு செயல்படத் தொடங்கிய வங்கிகள்! – வாடிக்கையாளர்கள் குவிந்ததால் அவதி
ஊரடங்குக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வங்கி பணிகள் மீண்டும் தொடங்கின. 50 சதவிகித பணியாளர்களுடன் வங்கி சேவை வழங்கப்பட்டாலும் அதிகப்படியாக வாடிக்கையாளர்கள் குவிந்ததால் நீண்ட தாமதம் ஏற்பட்டது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் ஊரடங்கில் பழையபடி தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் காலை முதல் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
வங்கிகள் கடந்த மாத இறுதியில் இரண்டு நாட்கள் மட்டும் மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்பட்டன. இன்று முதல் வங்கிகள் முழுமையாக செயல்படலாம்.
ஆனால் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க, டி.டி உள்ளிட்ட சேவைகள் பெற என ஏராளமானவர்கள் வங்கிகளில் குவிந்தனர். போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில், அளவுக்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் குவிந்ததால் வங்கிகள் திணறின. மக்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. வங்கி பணிகள் தொடர்ந்து செயல்படும் என்பதால் மிக அவசரம் இல்லாத பண பரிவர்த்தனைகளுக்கு வரும் நாட்களில் வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். வங்கிகளில் கூட்டம் கூடியதாலும் சமூக இடைவெளி மிகக் கடுமையாக மீறப்பட்டதாலும் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.