மீண்டும் நூல் விலை உயர்வு.. திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் கவலை..
திருப்பூரில் மீண்டும் நூல் விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பின்னலாடை உற்பத்தியின் தலைநகராக விளங்குவது திருப்பூர் மாவட்டம்.. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த பின்னலாடையில் 60 % இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பாடுகிறது. இதன் மூலம் பின்னலாடை ஏற்றுமதியில் மட்டும் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் வர்த்தக நகரமாகவும் திருப்பூர் இருந்து வருகிறது.
கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடைத் தொழில் தற்போதுதான் மெல்ல மீண்டும் வரும் சூழலில், நூல் விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாய் உருவெடுத்திருக்கிறது. நூல் விலல் மாதம்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 220 முதல் ரூ. 230 வரை விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ நூல், கடந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து கிலோ ரூ. 360 முதல் ரூ 400 வரை அதிகரித்தது. இந்த ஆண்டும் நூல் தரம் வாரியாக ரூ 400 முதல் ரூ. 470 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டது.
நூல் விலையை கட்டுப்படுத்த கோரி பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்பிறகு அடுத்த 6 மாதங்களுக்கு பருத்திக்கு இறக்குமதி வரி இல்லை என மத்திய அரசும் அறிவித்திருந்தது. ஆனால் இன்று மீண்டும் விலை உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு நூல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் ஆர்டர்கள் பெறுவதிலும், பெற்ற ஆர்டர்களி முடிப்பதிலும் சிக்கல் ஏற்படுவதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.