விஜயின் பரப்புரை தேதி மாற்றம் ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்
போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் தேதி மாற்றப்படுவதாக செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன், ஈரோட்டில் விஜய் வருகைக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் 84 விதிகளை காவல் துறையினர் விதித்துள்ளனர். இதில் இரண்டு, மூன்று விதிகள் மழை, வெயில் வந்தால் என்ன செய்வீர்கள்? போன்ற கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். இதெல்லாம் இதுவரை இல்லாத ஒன்று. அதற்கான குடை தேவைப்படுகிறது. ஆகவே இதுபோன்ற விதிகள் கூடுதலாக இருப்பதன் காரணமாக இந்த விதிகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக கூடுதலாக இரண்டு நாட்கள் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரம் கேட்டுள்ளோம். 16ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டத்தை 18 ஆம் தேதிக்கு மாற்றுகிறோம். 18ஆம் தேதி அனுமதி கேட்கின்றோம். 84 விதிகள் என்பது இதுவரை இல்லாத ஒன்று. விதிகளை ஆய்வு பார்த்த போது அதில் உள்ள விதிகள் இதுவரை இல்லாத கூடுதல் விதிகளாக இருக்கின்றன. அந்த விதிகளை நிறைவு செய்து அனுமதி பெற வேண்டும் என்றால் அதற்காக கூடுதலான நாட்கள் தேவைப்படுகிறது. ஆகவே 18ஆம் தேதி நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடிதம் தர உள்ளோம். அதற்கு பிறகு தலைமையில் எடுத்துச் சொல்லி நாட்கள் மாற்றுவதற்கு அனுமதி பெறப்படும்.
கொடுத்திருக்கும் நிபந்தனைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடியாது. ஆகையினால் இந்த தேதியை மாற்றி இருக்கின்றோம் கூடுதலாக இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டு அனுமதி கேட்போம், வழங்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம். எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களது பெயர் பட்டியலை கேட்கிறார்கள். அவர்களின் பட்டியலை தருவது இயலாத காரியம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சிபிஐ விசாரணை உள்ளது சிலவற்றை சொல்ல முடியவில்லை” என்றார்.


