எந்த பட்டாசு சிறந்தது : சாதாரண பட்டாசுகள் vs பசுமை பட்டாசுகள்... முழு விவரம் இதோ..!
பசுமை பட்டாசுகள் என்றவுடன் தீபாவளியே ‘புஷ்’னு போயிரும், என நினைக்கவேண்டாம். பசுமை பட்டாசுகளும், பாரம்பரிய பட்டாசுகளைப்போலவேதான் இருக்கும். ஆனால் சிறு,சிறு வித்தியாசங்கள் உள்ளன. பாரம்பரிய பட்டாசுகளைப்போல் பசுமை பட்டாசுகள் அதிக மாசை ஏற்படுத்தாது. சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40% முதல் 50% வரை குறைவான நச்சுவாயுவையே வெளியிடும். அதனால் இவை முற்றிலும் ஆபத்தற்றவை எனக்கூற முடியாது. மாசை கணிசமான அளவு குறைக்கும்.
பசுமை பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளை விட தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் துகள் பொருட்களை சுமார் 30 முதல் 35% வரை குறைக்கின்றன.பசுமை பட்டாசுகளில் குறைந்த PM 2.5, PM 10 மற்றும் குறைந்த உலோக மாசுபாடு உள்ளது. ஆனால் இது முற்றிலும் மாசு இல்லாதவை அல்ல.
வழக்கமான பட்டாசுகள் வெடிக்கும்போது கந்தகம், நைட்ரஜன், சல்ஃபர் போன்ற ஆபத்தான வாயுக்கள் வெளியாகும். இதனால் சுற்றுச்சூழல், உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கேடுதான். ஆனால் இந்த பசுமை பட்டாசுகள் வெடித்தபின் புகையாக மாறாமல் நீர்த்துளிகளாக மாறிவிடுகின்றன. இதனால் கந்தகம், நைட்ரஜன், சல்ஃபர் வாயுக்கள் நீருடன் கலந்துவிடுகின்றன. இந்த தொழில்நுட்பம் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். டெல்லியில் மாசு அதிகரிக்கும்போதெல்லாம் தண்ணீர் தெளிப்பார்கள் அப்போது அந்த மாசுக்களெல்லாம் நீரோடு கலந்துவிடும். மாசின் அளவும் குறைந்துவிடும். இதேபோல்தான் பசுமை பட்டாசுகளும் செயல்படுகின்றன.சாதாரண பட்டாசுகள் மிகவும் சத்தமாக வெடிக்கும். ஆனால் பசுமை பட்டாசுகள் அமைதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை சாதாரண பட்டாசுகளை விட குறைவான சத்தத்தை உருவாக்கும்.உண்மையான பசுமை பட்டாசுகளில் அடையாள சின்னங்கள் இருக்கும். குறிப்பாக CSIR-NEERI சின்னம் மற்றும் QR குறியீடு. அந்த குறியீட்டை ஸ்கேன் செய்து நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம்.
பசுமை பட்டாசுகள் மூன்று வகைப்படும். பாதுகாப்பான நீர் வெளியீட்டாளர்கள், பாதுகாப்பான தெர்மைட் கிராக்கர்ஸ் மற்றும் பாதுகாப்பான குறைந்தபட்ச அலுமினியம். ஒவ்வொரு வகையும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.
பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனால் பட்டாசு தொழில் பாதிக்கப்படுமே என நினைக்க வேண்டாம். பசுமை பட்டாசுகளை எப்படி தயாரிப்பது என கற்றுக்கொடுத்துவிட்டால் அதை அவர்களே தயாரிக்க தொடங்கிவிடுவர். இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பலவகையில் நன்மை விளையுமே தவிர தீமை விளையாது.
நமக்கு இந்த பட்டாசு கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாத, கொண்டாடியே தீர வேண்டியதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு அது வருடத்தில் ஒரு நரக நாள். குறிப்பாக மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த நாள் மரணத்தோடு போராடும் 1440 நிமிடங்கள். அவர்களுக்கு மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்த நாள் ஒரு கடினமான நாளாகவே இருக்கும். உலக அளவில் பேசப்பட்டிருக்கும் பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசும் இதனால் அதிகமாகும். இதற்காக முற்றிலுமாக பட்டாசே வெடிக்கக்கூடாது என்று கூறவில்லை, அப்படி ஒரு முடிவிருந்தால் அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான், முடிந்தவரை பட்டாசு வெடிப்பதை குறைக்கலாம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவோம்.
அனைவருக்கும், அனைத்திற்கும் பாதுகாப்பான தீப ஒளி திருநாளை கொண்டாட முன்வருவோம்.


