சரியான நேரம் வரும் போது விஜய் ஊடகங்களை சந்திப்பார் : விஜய்யின் நண்பர் சஞ்சீவ்..!
கரூரில் பிரசாரம் மேற்கொண்டார் த.வெ.க. தலைவர் விஜய். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்ததது.
இந்த நிலையில் விஜய்யின் நீண்ட கால நண்பரும், நடிகருமான சஞ்சீவ், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சஞ்சீவிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், “ஊடகங்களை சந்திப்பதற்கு விஜய்க்கு தைரியம் உள்ளதா?” என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த சஞ்சீவ், “அவருக்கு பயம்லாம் கிடையாது. சரியான நேரம் வரும்போது அவர் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார்” என்று தெரிவித்தார்.


