நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு!!
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுற்று வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும் வடகிழக்கு பருவமழை காரணமாக வாக்காளர் பட்டியல் தயார் செய்து வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கால அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அட்டவணைப்படி புகைப்படம் இல்லாத வாக்காளர் பட்டியலில் வருகிற 27ம் தேதிக்குள், புகைப்பட வாக்காளர் பட்டியலை டிசம்பர் 4-ல் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் டிசம்பர் 5 ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணைப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் பணியை முடிக்க வேண்டும் என்றும் இடைப்பட்ட காலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு தயார் செய்யப்பட்ட வரைவு புகைப்பட வாக்காளர் பட்டியலில் உள்ள வார்டு மற்றும் தெருக்கள் பெயர், ஓட்டுச்சாவடி விவரங்கள் ஒருங்கிணைந்த சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளபடி உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சொந்த மாவட்டங்களில் அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.