7ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த இரண்டு பேர் சிறையிலடைப்பு
சிவகங்கை மாவட்டத்தில் எம் சூரங்குடி பகுதியில் கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவனும் மனைவியும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் 12 வயதுடைய மகளையும், 6 வயதுடைய மகனையும் கணவரிடம் விட்டுவிட்டு, மற்ற இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மனைவி சிவகங்கை அருகே உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தந்தையுடன் வசித்து வந்த அந்த சிறுமி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். பள்ளி விடுமுறை நாட்களில் அருகிலுள்ள வயலில் சென்று மாடு மேய்த்து வந்திருக்கிறார். அப்போது அந்த 12 வயது சிறுமிக்கு சாக்லேட்டும் தின்பண்டங்களும் வாங்கி கொடுத்து அதே ஊரை சேர்ந்த 28 வயது கணபதி என்கிற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.
இப்படி அவர் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதைப்பற்றி தாயாரிடம் சொல்லி அழுது இருக்கிறார் அந்த சிறுமி. அவர் உடனே திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, கணபதியை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
அதன் பின்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கணபதியுடன் சேர்ந்து அங்கு கட்டிட வேலைக்கு வந்த பிரபு என்கிற 35 வயது வாலிபரும் பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.