டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது- அடித்து சொன்ன தினகரன்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது இத்திட்டம் கண்டிப்பாக வரவே வராது எனவும், ஒருவேளை திட்டம் வந்தால் அதனை எதிர்த்து போராடும் மக்களுக்கு ஆதரவாக அமமுக இருக்கும் எனவும் பேசினார்.
அரிட்டாபட்டி வல்லாளபட்டி நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து இத்திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரிட்டாபட்டி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுடைய பேசிய தினகரன், ஒன்றிய அமைச்சர் இத்திட்டம் இங்கு செயல்படுத்தப்பட மாட்டாது என தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும், எனவே இத்திட்டம் இப்பகுதியில் வரவே வராது என்று தெரிவித்தவர், ஒருவேளை திட்டம் மறு ஆய்வுக்கு பின்னர் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தும் போது மக்களுக்கு துணையாக நின்று போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஈடுபடும் என தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கருத்து கேட்டபோது தமிழ்நாடு அரசு இப்பகுதி பல்லுயிர் வாழும் பாதுகாப்பு மண்டலம் ஆக அறிவிக்கப்பட்டுள்ள பகுதி என தெரிவித்து இருந்தால் ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்காது எனவும், மாநில அரசு வழக்கம்போல தூங்கிக் கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தது போல் இதற்கும் முறையாக பதில் அளிக்காததால் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதாகவும் தற்போது பொது மக்களின் போராட்டத்தை அடுத்து இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் மறு ஆய்வு செய்ய வரும்பொழுது பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்த டிடிவி தினகரன், ஒருவேளை மறு ஆய்வுக்குப் பின்னரும் இத்திட்டம் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டால் அப்போது பொதுமக்கள் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு ஆதரவாக அமமமுக இருக்கும் என உறுதி அளித்தார்.