கிறித்தவ பெருங்குடி மக்கள் யாவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - திருமாவளவன்
கிறித்தவ பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இயேசு பெருமான் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் இனிய வேளையில் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈராயிரம் ஆண்டுகளாக இயேசு பெருமானின் வார்த்தைகள் மானுடத்தை வழிநடத்துகின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடு அவர் போதித்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுகின்றன. மனிதகுலம் வெறுப்பை எதிர்கொள்வதற்கு ஏதுவான மாமருந்து அன்பின் வழி பெருக்கும் சகோதரத்துவம் என்பதைப் போதிப்பதே இயேசுநெறியாகும்!
வெறுப்புக்கு வெறுப்பை, வன்முறைக்கு வன்முறையோ தீர்வாகாது என்றும், அன்பும் கருணையும் தான் வெறுப்பைத் தணிப்பதற்கும் வன்முறையைத் தடுப்பதற்கும் வழிமுறை என்றும் உலகுக்கு எடுத்துரைக்கும் அறநெறியே இயேசுபெருமானின் போதனையாகும். அதன்வழியே மனிதகுலத்தினிடையே நல்லிணக்கத்தை வளர்த்து சகோதரத்துவத்தைத் தழைக்க செய்ய இயலும். அத்தகைய சகோதரத்துவமே மானுட அமைதிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும். எனவே, இயேசுபெருமான் பிறந்தநாளில் இம்மண்ணில் சகோதரத்துவத்தைத் தழைக்கச் செய்ய உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.